குற்ற உணர்ச்சி
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியில், ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் ரன்கள் அடிக்க ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக, ராஜஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய ருதுராஜ், இப்போட்டியில் பந்துகளை க்ளீயர் பண்ண ரொம்பவே சிரமப்பட்டார். 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், அர்ஷ்தீப் சிங் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது ஷாட்டில் அத்தனை விரக்தி இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மொயீன் அலி, 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், அதே அர்ஷ்தீப் ஓவரில் கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தன்னால் அடிக்க முடியவில்லையே என்ற எந்த குற்ற உணர்ச்சியும், வேதனையும் அவரிடம் இருப்பது போன்றே தெரியவில்லை. அவர் பாட்டுக்கு நடையைக் கட்ட, அடுத்து வந்த உத்தப்பா வெறும் 2 ரன்களில் ஜோர்டன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய ராயுடுவும் 4 ரன்களில் அவுட்டானார்.
19வது ஓவரில் சிக்ஸ்
இதையடுத்து களமிறங்கிய தோனி வழக்கத்துக்கு மாறாக, தொடக்கத்திலேயே 2 பவுண்டரிகள் அடிக்க, "துபாயில் கூட மழை வந்துவிடுமோ" என்று ரசிகர்கள் ஆச்சர்யப்பட, "ஐ ஏமாந்தியா!" என்று ரவி பிஷ்னாய் ஓவரில் 12 ரன்களில் போல்டாகி வெளியேறினார். துபாய் வெயில் மண்டையை பிளக்க, தோனி தனது வீக் பாயிண்ட்டான ஸ்பின் பவுலிங்கில் மீண்டும் ஒருமுறை அவுட்டாகி தலையை தொங்கப்போட்டு வெளியேறினார். ஒருபக்கம், தனி ஆளாக நின்று போராடிக் கொண்டிருந்த டு பிளசிஸ், அரைசதம் அடித்து, 19வது ஓவரில் தான் முதல் சிக்ஸரை அடித்தார். இந்த போட்டியில் சென்னை அடித்த முதல் சிக்ஸ் இதுதான். அதாவது, 19வது ஓவரில் தான்.
135 டார்கெட்
19 ஓவரில் சென்னை ஐந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்து பவுண்டரி, இரண்டாவது பந்து சிக்ஸ் அடித்த டு பிளசிஸ், 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு சென்னை அணியால் பெரிதாக என்ன அடித்துவிட முடியும்? முடிவில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
135 கடினமான இலக்கா?
பஞ்சாப் ஒருவேளை இந்த போட்டியில் வென்றாலும், 12 புள்ளிகள் பெறலாம். ஆனாலும், அவர்களால் பிளே ஆஃப் முன்னேறுவது கடினம் தான். பஞ்சாபின் மிகக் குறைவான ரன் ரேட் தான் அந்த அணிக்கு மைனஸ். சென்னையைப் பொறுத்தவரை, இந்த போட்டியில் தோற்றாலும், 2வது இடத்தில் தான் நீடிக்கும். ஏனெனில், மற்ற அனைத்து அணிகளையும் விட அதிக ரன் ரேட் வைத்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். எனினும், இந்த கடினமான துபாய் பிட்சில், பஞ்சாப் 135 ரன்கள் அடிப்பதும் சற்று கடினம் போலவே தெரிகிறது.