இறுதிப்போட்டி
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் சிஎஸ்கே ஒரு புறம் திடீரென அசுரத்தனமான கம்பேக் கொடுத்த கேகேஆர் ஒருபுறம் என இருப்பதால் ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த போட்டி சென்னை அணியின் பேட்டிங் மற்றும் கொல்கத்தா அணியின் பவுலிங்கிற்கு இடையேதான் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு கேகேஆர் அணியின் பந்துவீச்சு அமைந்துள்ளது.
இரு அணி பலம்
சிஎஸ்கேவில் டூப்ளசிஸ் - ருதுராஜ் ஆகியோரும், கொல்கத்தாவில் சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதே போல பந்துவீச்சில் சிஎஸ்கே அணியில் ஷர்துல் மட்டுமே முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் கொல்கத்தா அணியில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, ஃபெர்க்யூசன் என 3 பவுலர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே இன்றைய இறுதிப்போட்டியில் அதிரடி இருக்குமா? அல்லது குறைந்த இலக்கு போட்டிதான் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிட்ச் கண்டிஷன்
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கு ஒத்துழைக்கக் கூடிய பிட்ச்-ஐ தயார் செய்யப்பட்டுள்ளது. துபாய் களம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கவுள்ளது. இதே போல வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் கைக்கொடுக்கும். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களின் திறமைக்கு ஏற்ப விக்கெட்கள் விழலாம்.
டாஸ்
துபாய் மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் மிக தூரமாக இருக்கும். எனினும் இங்கு பந்து நன்கு பேட்டிற்கு வரும் என்பதால் முதலில் களமிறங்கும் அணி சராசரியாக 165 ரன்களை சேர்க்கலாம். ஆனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே இங்கு அதிக வெற்றிகளை கண்டுள்ளது. அதாவது இதுவரை 80% வெற்றிகள் இங்கு இரண்டாவது பேட்டிங் செய்த அணிக்கே கிடைத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் அணி பந்துவீச்சை தான் முதலில் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.