வெற்றி பெற வேண்டிய கட்டாயம்
இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரூ மற்றும் மும்பை அணிகள் மோதின. ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதலே இரு அணிகளும் திணறி வருகின்றன. மும்பை அணி ஐக்கிய அமீரகத்தில் சென்னைக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்திலும் கொல்கத்தா அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்திருந்தது. அதேபோல பெங்களூரு அணியும் கடைசி இரு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ச்சியாகத் தோல்விகளை எதிர்கொண்டு வருவதால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் களமிறங்கினர்.
கலகல வீடியோ
இதனால் இரு அணி வீரர்களும் மைதானத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன் பெங்களூரு கேப்டன் கோலியும் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும் ஜாலியாக சிரித்துப் பேசும் வீடியோ தான் இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. பெவிலியனில் அமர்ந்து கொண்டிருக்கும் ரோஹித் சர்மாவிடம் சென்று கோலி எதோ சொல்கிறார். அதைக் கேட்டு ரோஹித் சிரித்துக் கொண்டே எழுந்திருக்க அந்த இடமே கலகலப்பானது.
தனித்தனி ஸ்டைல்
கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையே நடைபெற்ற இந்த க்யூட் உரையாடல் தான் இப்போது ட்விட்டர் டிரெண்டிங்..! கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. காரணம் இருவரும் தங்களுக்கென தனியொரு ஸ்டைலை கொண்டவர்கள். போட்டிங்கில் ஆக்ரோஷமாக பொளந்து கட்டும் ரோஹித் சர்மா, மற்றபடி களத்தில் அமைதியாகவே இருப்பார். அதேநேரம் க்ளாஸான பேட்ஸ்மேனான கோலி, பீல்டிங் சமயத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்.
இந்திய அணியில் பிளவு?
இதனால் கோலி தலைமையில் விளையாடும் போது இந்திய அணி ஒரு மாதிரியும், கோலி ஓய்வில் இருக்கும் சமயத்தில் ரோஹித் தலைமையில் இந்திய அணி விளையாடும் போது வேறொரு விதத்திலும் இருக்கும். இதனால் இரண்டு வீரர்களுக்கு இடையே மோதல் இருப்பதாகவும், அணியிலேயே கோலிக்கு ஆதரவாக சில வீரர்கள் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்கள் என இரு க்ரூப்களாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
Recommended Video
கோலி vs ரோஹித்
குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு 34 வயது ஆவதால், அவரை இந்திய அணியின் ஒருநாள் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கக் கோலி விரும்புவதாகவும் தகவல் வெளியானது. அதேபோல ரோஹித் சர்மாவுடன் இருக்கும் மோதல் போக்கு காரணமாகவே கோலி வரும் டி 20 உலகக் கோப்பை தொடருடன் டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் உலா வரத் தொடங்கின. இப்படி கற்பனையாகப் பறந்த அனைத்து வியூகங்களுக்கும் நேற்றைய இந்த வீடியோ பதில் அளித்துள்ளது. களத்தில் தனித்தனி ஸ்டைலை பின்பற்றினாலும் கூட களத்திற்கு வெளியே எப்போதும் தாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்பதை இருவரும் காட்டியுள்ளனர்.
நேற்றைய போட்டி
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணிக்குத் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், 2ஆவது ஓவரிலேயே டக் அவுட் ஆனார். அதன் பிறகு பாட்னர்ஷிப் அமைத்த கோலியும் ஸ்ரீகர் பரத்தும் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். பரத் 9ஆவது ஓவரில் 32 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சற்று நேரத்திலேயே 52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கோலி அவுட் ஆனார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஷாபாஸ் அகமதும் அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் மெக்ஸ்வேல் காட்டிய அதிரடியில் 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
சரிந்த மும்பை
அதன் பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற டார்கெட்டுடன் இறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. ஒருபுறம் டி காக் நிதானம் காட்ட, மறுபுறம் ரோஹித் சர்மாவின் அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவர் ப்ளே முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 56 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அடுத்து ஏழாவது ஓவரிலேயே சாஹல் இந்த பாட்னர்ஷிப்பை உடைத்தார். 24 ரன்கல் எடுத்திருந்த டி காக் மெக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி வெறும் 28 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மாவும் மெக்ஸ்வெல் பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு வந்த மும்பை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். டி காக் ரோஹித் தவிர மும்பையில் யாரும் இரட்டை இலக்கில் ரன்களை எடுக்கவில்லை.இறுதியில் மும்பை அணி 18 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.