வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேச்சு
அதைத் தொடர்ந்தே கருப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை நிறுத்தக் கோரி, அவர்களுக்கு நியாயம் கோரி போராட்டங்கள் வெடித்து உள்ளது. கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இது தொடர்பாக பேசி வருகின்றனர்.
மனம் வருந்தி பேசிய பிராவோ
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன்கள் டேரன் சமி, கிறிஸ் கெயில் ஆகியோர் இது பற்றி பல்வேறு சமூக வலைதள பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில், டிவைன் பிராவோ இன வெறிக்கு எதிராக மனம் வருந்தி பேசி உள்ளார்.
வரலாறு தெரியும்
முன்னாள் ஜிம்பாப்வே அணி வீரர் போமி எம்பாங்க்வா உடனான சந்திப்பில் பேசிய அவர், "உலகில் என்ன நடந்து வருகிறது என்பதை பார்க்க கவலையாக உள்ளது. ஒரு கருப்பின மனிதனாக கருப்பின மக்கள் என்ன மாதிரியான விஷயங்களை எதிர் கொண்டு இருக்கிறார்கள் என்ற வரலாறு தெரியும்." என்றார்.
சம உரிமை மற்றும் மரியாதை
மேலும், "நாங்கள் எப்போதும் பழி வாங்க வேண்டும் என கேட்கவில்லை. நாங்கள் சம உரிமை மற்றும் மரியாதையை தான் கேட்கிறோம். அவ்வளவு தான். நாங்கள் மற்றவருக்கு மரியாதை அளிக்கிறோம். அப்புறமும் ஏன் நாம் இதை மீண்டும், மீண்டும் அனுபவிக்கிறோம்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
அன்பை பரிமாறுகிறோம்
"எங்களுக்கு மரியாதை மட்டும் தான் வேண்டும். நாங்கள் அன்பை பரிமாறுகிறோம். மக்களை அவர்கள் எப்படி இருந்தாலும் மதிக்கிறோம். அதுதான் இங்கே முக்கியம்." என கூறி உள்ளார் பிராவோ, கருப்பின மக்கள் தங்களை தாழ்வாக எண்ணக் கூடாது எனவும் கூறி உள்ளார்.
சக்தி வாய்ந்தவர்கள்
"நம் சகோதர, சகோதரிகள் தாங்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக உலகின் தலைசிறந்த சிலரை பாருங்கள். நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கேல் ஜோர்டான் என பல தலைவர்கள் நமக்கான பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்." என்றார் பிராவோ.
பரபரப்பு
டேரன் சமி தன் மீது ஐபிஎல் தொடரில் இனவெறி கொண்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டது என சமீபத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தார். தற்போது பிராவோ தாங்கள் பழி வாங்க வேண்டுமென நினைக்கவில்லை, மரியாதை மட்டுமே கேட்கிறோம் எனக் கூறி சிந்திக்க வைத்துள்ளார்.