95வது வயதில் காலமானார்
மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் கடந்த புதன்கிழமை வயதுமூப்பு காரணமாக தன்னுடைய 95வது வயதில் காலமானார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய இழப்பு என்று சர்வதேச அளவில் பல வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான எவர்டன் வீக்சின் சாதனைகள் போற்றப்பட்டு வருகின்றன.
எவர்டன் வீக்ஸ் இடம்பெறுவார்
இந்நிலையில், எவர்டன் வீக்சின் சாதனைகளை போற்றும்வகையில் ஈடன் கார்டனில் அமையவுள்ள அருங்காட்சியத்தில் அவர் இடம்பெறுவார் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. த்ரீ டபள்யூக்களில் ஒருவராக போற்றப்படும் வீக்ஸ், கடந்த 1948ல் சுதந்திர இந்தியாவில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியபோது, தொடர்ந்து 5 சதங்களை அடித்து சாதனை படைத்தவர்.
பெங்கால் கிரிக்கெட் வாரியம் பாராட்டு
இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு சதங்கள் அடங்கும். ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் விளையாடி 162 மற்றும் 101 ஆகிய இரண்டு சதங்களையும் அவர் அடித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் ஈடன் கார்டனில் நடத்தப்பட்ட சர்வதேச டெஸ்ட் போட்டியில் வீக்ஸ் அடித்த சதமே முதல் சதம் என்ற சாதனை அவருக்கு உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அவிஷேக் தால்மியா தெரிவித்துள்ளார்.
வீக்ஸ் விளையாடிய போட்டி
இதனிடையே கொரோனா ஊரடங்கு தளர்வானதும் ஈடன் கார்டனில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் எவர்டன் வீக்ஸ் நிரந்தரமாக இடம்பெறுவார் என்றும் தால்மியா தெரிவித்துள்ளார். மேலும் விருதுகள் வழங்கும் ஆண்டுவிழாவிலும் அவர் விளையாடிய டெஸ்ட் போட்டி குறித்து பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.