கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 60,000 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்
அதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த முடியாத சூழலும் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் மக்கள் கூட்டமாக கூட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் தள்ளி வைப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் திருமணத்தை ஏப்ரல் மாதத்தில் நிச்சயித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் இப்போது தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். இரு வீரர்கள் நிச்சயம் செய்து கொண்டு, திருமண தேதியை முடிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எட்டு வீரர்கள் யார்?
ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள ஆடம் ஜாம்பா, டிஆர்சி ஷார்ட், ஜேக்சன் பேர்டு, ஆண்ட்ரூ டை ஆகியோரும், உள்ளூர் ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்வெப்சன், அலிஸ்டர் மெக்டேர்மாட் ஆகியோரும், உள்ளூர் அணிகளில் ஆடி வரும் வீராங்கனைகளான ஜெஸ் ஜோனாசன் மற்றும் கேட்லின் பிரயட் தான் அந்த வீரர்கள்.
ஏன் ஏப்ரல் மாதம்?
இவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் திருமணத்தை நிச்சயம் செய்து இருந்தனர். இத்தனை பேர் ஏப்ரல் மாதத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம் ஏப்ரல் மாதத்தில் தான் ஆஸ்திரேலியாவில் அதிக கிரிக்கெட் போட்டிகள் நடப்பது இல்லை.
கடும் ஏமாற்றம்
இதே காலகட்டத்தில் தான் ஐபிஎல் தொடரும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கனகச்சிதமாக திட்டமிட்டு திருமண ஏற்பாடுகள் செய்த அந்த கிரிக்கெட் வீரர்கள் தற்போது கொரோனா வைரஸால் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
நிச்சயம் செய்த வீரர்கள்
பிப்ரவரி மாதம் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் வம்சாவளிப் பெண்ணான வினி ராமனை நிச்சயம் செய்து இருந்தார். அதே போல, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் கடந்த மாதம் நிச்சயம் செய்து இருந்தார்.
அடுத்த ஆண்டு
தற்போது இவர்கள் இருவரும் தங்கள் திருமண தேதியை முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அனேகமாக அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. அதுவரை கொரோனா வைரஸ் இப்படி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க விடாம பண்ணிடுச்சே என அவர்கள் புலம்ப வேண்டியது தான்.