சிறந்த பண்பு
அனில் கும்ப்ளே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் ஆவார். களத்தில் மட்டுமின்றி, களத்துக்கு வெளியேயும் அவர் சிறந்த பண்புகளைக் கொண்டவர். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவத்தை கூறி உள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக்.
நல்ல நட்பு
இந்தியா - பாகிஸ்தான் அணிகளில் ஒரே நேரத்தில் அனில் கும்ப்ளே - சக்லைன் முஷ்டாக் சுழற் பந்துவீச்சாளர்களாக ஜொலித்து வந்தனர். இரு நாடுகளும் களத்தில் கடும் மோதலை வெளிப்படுத்தினாலும், இருவரும் வெளியே நல்ல நட்பை கொண்டு இருந்தனர்.
உதவி கேட்ட முஷ்டாக்
இங்கிலாந்து சென்று இருந்த போது ஒருமுறை அங்கே அனில் கும்ப்ளேவை சந்தித்துள்ளார் சக்லைன் முஷ்டாக். அப்போது பாகிஸ்தானில் சிறந்த கண் மருத்துவர்கள் இல்லை. அதனால் நான் மிகவும் சிரமப்படுகிறேன். யாரேனும் ஒரு மருத்துவரை பரிந்துரைக்க முடியுமா? என கேட்டுள்ளார் சக்லைன் முஷ்டாக்.
அனில் கும்ப்ளே உதவி
அனில் கும்ப்ளே சற்றும் யோசிக்காமல் லண்டனில் இருக்கும் மருத்துவர் பாரத் ருகாணி தொலைபேசி எண்ணை அளித்துள்ளார். மேலும், தானும், சௌரவ் கங்குலியும் அவரிடம் தான் பரிசோதனை செய்து கொள்வதாக கூறி நம்பிக்கை அளித்துள்ளார் அனில் கும்ப்ளே.
கண் பார்வை மீட்பு
அந்த மருத்துவரை சந்தித்துள்ளார் சக்லைன் முஷ்டாக். அங்கே புதிய லென்ஸ் பெற்றுள்ளார். மேலும், கண்ணில் இருந்த புரையை நீக்கி, தன் பலமிழந்த கண் பார்வையை மீட்டுக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பல மருத்துவர்களிடம் சென்றும் தீராத பிரச்சனையை அங்கே தீர்த்துக் கொண்டுள்ளார் முஷ்டாக்.
அனில் கும்ப்ளே தான் காரணம்
அனில் கும்ப்ளே தான் அந்த மருத்துவரை தான் சந்திக்க காரணம் என்றும் அவரால் தான் தன் கண் பார்வை பிரச்சனை குணமானது என்றும், அனில் கும்ப்ளே ஒரு முத்தைப் போன்றவர் என்றும் கூறி பாராட்டி உள்ளார் சக்லைன் முஷ்டாக்.
பீல்டிங் பிரச்சனை
இந்த கண் சிகிச்சைக்கு முன்பு வரை பவுண்டரி எல்லையில் நின்று இருந்தால் தனக்கு எங்கே பார்ப்பது என சுத்தமாக தெரியாது என்றும், அதனாலேயே தான் பீல்டிங்கில் மெதுவாக செயல்பட்டதாகவும், ஆனால், சிகிச்சைக்கு பின் கண்பார்வை தெளிவாக தெரிந்தது எனவும் கூறி உள்ளார் முஷ்டாக்.
மூத்த சகோதரர்
அனில் கும்ப்ளே என் மூத்த சகோதரர் போன்றவர். எப்போது பார்த்துக் கொண்டாலும் நாங்கள் நன்றாக பேசிக் கொள்வோம். நாங்கள் விளையாடிய காலத்திலும், ஒரு தொடரின் இடையே நான் அவரிடம் ஆலோசனை கேட்பேன். அவர் தேவையான ஆலோசனை கூறுவார். திசை திருப்பும் வகையில் கூற மாட்டார். அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது என கூறினார் சக்லைன் முஷ்டாக்.