முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி
கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியின் தலைமையின்கீழ்தான் தன்னுடைய முதல் ஆட்டத்தை துவக்கினார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. தொடர்ந்து தன்னுடைய சிறப்பான ஆட்டங்களின்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை சிறந்த கேப்டனாகவும் தகவமைத்துக் கொண்டார்.
தோனியின் தலைமை பண்புகள்
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி ஒரு பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலக மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் எவ்வளவு பெரிய பங்கீட்டை அளித்துள்ளார் என்று வியப்பை வெளிப்படுத்தியுள்ள கங்குலி, தோனியின் தலைமை பண்புகள் முக்கியமாக ஒருநாள் போட்டிகளில் அவருடைய பண்புகள் யாருடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
பெருமை தெரிவித்த கங்குலி
ஐசிசியின் சாம்பியன் டிராபி, உலக கோப்பை மற்றும் டி20 கோப்பைகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தோனியின் ஆரம்பகால ஆட்டங்கள் உலகையே வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தவை என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார் கங்குலி. மேலும் விக்கெட் கீப்பர்களுக்கு அவர் மிகப்பெரிய முன்னுதாரணமாக விளங்கியதாகவும் கங்குலி கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட வாழ்த்து
இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, நவீன சகாப்தத்தின் மிகச்சிறந்த வீரர் தோனி என்று புகழ்ந்துள்ளார். ஓய்வு முடிவு தோனியின் சொந்த விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த கேரியரை கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தான் அணியில் இணைந்தபோது இருந்ததைவிட அணியை சிறப்பாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.