மும்பை: கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பங்குகளை குறைந்த விலைக்கு விற்று ரூ.73 கோடியில் அன்னிய செலாவணி இழப்பு செய்ததாக கொல்கத்தா நைட்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகர்கள் ஷாரூக் கான், அவரது மனைவி கௌரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், இந்திய பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2008ம் ஆண்டு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கினார். அதன் இயக்குநராக ஷாருக்கானின் மனைவி கவுரி செயல்பட்டார். அந்த நிறுவனம் சார்பில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கப்பட்டது. அதன் உரிமையாளர்களாக ஷாருக்கான், ஜூகி சாவ்லா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள், ரெட் சில்லிஸ் நிறுவனத்திடமே இருந்தன. ஐ.பி.எல். பந்தயத்தின் வெற்றிக்கு பிறகு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ரூ.2 கோடி கூடுதல் பங்குகளை வெளியிட்டது. அவற்றில் 50 லட்சம் பங்குகள், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி சீ ஐலண்ட் நிறுவனத்துக்கும், 40 லட்சம் பங்குகள் நடிகை ஜூகி சாவ்லாவுக்கும் வழங்கப்பட்டன.
அப்போது, ஒரு பங்கின் அடிப்படை மதிப்பு ரூ.99 வரை இருந்தபோதிலும், வெறும் 10 ரூபாய்க்கு இவை வழங்கப்பட்டன. அதிலும், ஜூகி சாவ்லா தனக்கு கிடைத்த 40 லட்சம் பங்குகளை அதே மொரீஷியஸ் நிறுவனத்துக்கு ஒரு பங்கு ரூ.10 விலைக்கு விற்று விட்டார்.இப்படி குறைந்த விலைக்கு விற்றதால், ரூ.73 கோடியே 60 லட்சம் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நடிகர் ஷாரூக் கான், அவரது மனைவி கௌரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோரிடம் அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் (பெமா) வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் 3 பேரிடமும் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிவடையும் நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை. அதன்படி மேற்கண்ட 3 பேரும் 15 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.