அசத்தல் துவக்கம்
இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் இடையே ஆன போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேரிஸ்டோ அசத்தல் துவக்கம் அளித்தனர்.
பேரிஸ்டோ அரைசதம்
முதலில் நான்கு ஓவர்கள் நிதானம் காட்டிய இந்த ஜோடி அதன் பின் அதிரடிக்கு மாறியது. பேரிஸ்டோ 51 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். ஜேசன் ராய் தொடர்ந்து ரன் குவித்து வந்தார். 27வது ஓவரின் ஐந்தாம் பந்தில் சதம் கடந்தார் அவர்.
என்ன நடந்தது?
அவர் சிங்கிள் ரன் அடிக்க முயற்சி செய்த போது, வங்கதேச பீல்டர்கள் செய்த தவறால், அது ஃபோராக மாறியது. பந்து பவுண்டரி செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ரன் ஓடிய ஜேசன் ராய், அம்பயர் ஜோயல் வில்சன் மீது மோதி, அவரை கீழே சாய்த்தார்.
ஏன் மோதினார்?
பந்து ஃபோர் சென்றால் தான் சதத்தை கடப்போம் என்ற எண்ணத்தில், பந்தை கவனித்த ஜேசன் ராய், அதை உறுதி செய்து கொண்டு சதத்தை கொண்டாடத் துவங்கினார். அப்போதுதான் அம்பயர் நிற்பதை கவனிக்காமல் அவரோடு மோதினார்.
சக வீரர்கள் சிரிப்பு
இதைக் கண்ட இங்கிலாந்து வீரர்கள் உடை மாற்றும் அறையில் நின்று விழுந்து, விழுந்து சிரித்தனர். சதம் அடித்த மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியாமல், அம்பயருக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.
முதல் சதம்
இது இந்த உலகக்கோப்பை தொடரில் ஜேசன் ராய் அடிக்கும் முதல் சதம் ஆகும். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அரைசதம் எடுத்த ஜேசன் ராய், பாகிஸ்தான் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார்.
நான்காம் இடம்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது ஜேசன் ராயின் 9வது சதம் ஆகும். இங்கிலாந்து அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடம் பெற்றுள்ளார் ஜேசன் ராய்.