மூன்றாவது போட்டி
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலும் வென்றால் அயர்லாந்து அணியை வைட்வாஷ் செய்யலாம் என்ற நிலை இருந்தது.
டாஸ்
இந்த நிலையில், அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி துவக்கத்தில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது கேப்டன் இயான் மார்கன் மற்றும் டாம் பான்டன் இணைந்து அணியை மீட்டனர்.
இயான் மார்கன் அதிரடி ஆட்டம்
இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடி 15 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து சதம் கடந்தார். 84 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் பான்டன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பு
வேகமாக ரன் குவித்தாலும் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்து இருந்தது. 250 ரன்களை கடப்பதே கடினம் என்ற நிலை இருந்தது. அப்போது பின்வரிசை வீரர்கள் டேவிட் வில்லி 51, டாம் கர்ரன் 38*, மஹ்மூத் 12 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 328 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியின் கிரைக் யங் 3, மார்க் அடைர் 1, ஜோஷுவா லிட்டில் 2, கர்ட்டிஸ் கேம்பர் 2, டெலானி 1 விக்கெட் வீழ்த்தினர்.
அயர்லாந்து சேஸிங்
329 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி அயர்லாந்து அணி ஆடியது. துவக்க வீரர் டெலானி 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அதிரடியாக ஆடினர்.
214 ரன்கள் கூட்டணி
இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஸ்டிர்லிங் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டை விட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அவர் 128 பந்துகளில் 142 ரன்கள் குவித்தார்.
சதம்
பால்பிர்னி 112 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் வந்த ஹேரி டெக்டார், கெவின் ஓ பிரையன் கடைசி ஓவர் வரை நின்று அணியை கரை சேர்த்தனர். அவர்கள் இருவரும் களத்தில் ஜோடி சேர்ந்த போது வெற்றிக்கு 33 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணியில் அனுபவம் குறைந்த சகிப் மஹ்மூத் பந்து வீசினார். அந்த ஓவரில் அயர்லாந்து அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. மஹ்மூத் ஒரு நோ பால் வீசியதும் சாதகமாக அமைந்தது. 49.5 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது.
இரண்டாவது வெற்றி
இந்த ஆறுதல் வெற்றி மூலம் இங்கிலாந்து அணியை இரண்டாவது முறையாக வீழ்த்தியது அயர்லாந்து. இதற்கு முன்பும் 328 ரன்கள் என்ற இலக்கை எட்டி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. மீண்டும் அதே போன்ற ஒரு வெற்றியை பெற்றுள்ளது அயர்லாந்து. ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.