போட்டியில் என்ன நடந்தது?
அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது இங்கிலாந்து அணி. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உலகக்கோப்பை வெற்றி பெற்ற அணியா இது என எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அயர்லாந்து ஆதிக்கம்
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 303 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் அயர்லாந்து அணி லேசாக தடுமாறினாலும், போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் வெற்றிக்கு 182 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது.
இரட்டை குழல் தாக்குதல்
அயர்லாந்து வீரர்கள் வெற்றிக் கனவுகளோடு பேட்டிங் செய்ய வந்தனர். இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் பந்துவீசத் துவங்கினர். வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் போர்ட்டர்பீல்டு 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சீட்டுக் கட்டு போல பிராடு, வோக்ஸ் ஓவர்களில் சரியத் துவங்கியது அயர்லாந்து விக்கெட்கள்.
மொத்தமும் காலி
15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது அயர்லாந்து. வோக்ஸ் 6 விக்கெட்களும், பிராடு 4 விக்கெட்களும் எடுத்து அசத்தினர். அயர்லாந்து அணியில் மெக்கோலம் 11 ரன்கள் எடுத்து இரட்டை இலக்க ரன்னை எட்டினார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 10 ரன்னை தொடவில்லை. நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.
கேப்டன் எடுத்த முடிவு
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எடுத்த சரியான முடிவால் இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து அயர்லாந்து கதையை முடிக்க முடிந்தது. புதிய பந்தை வீசுவதில் கெட்டிக்கார வீரர்கள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு. புதிய பந்தில், அவர்கள் இருவரின் பந்துவீச்சில் அனுபவமற்ற அயர்லாந்து அணி தடுமாறுகிறது என்பதை உணர்ந்து கொண்டார் ஜோ ரூட்.
உஷார் ஆனார்
வேறு பந்துவீச்சாளரை மாற்றினால், எப்படியும் அவர்கள் உஷார் ஆகி விடுவார்கள் என்பதால் வேறு யாருக்கும் ஓவர் தரவில்லை. ஒருவேளை வேறு பந்துவீச்சாளரை மாற்றி இருந்தாலும் அயர்லாந்து அணி சொதப்பி இருக்கும். ஆனால், கொஞ்சம் தட்டுத் தடுமாறி இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். வெறும் 182 ரன்கள் தான் இலக்கு என்பதால் பிராடு, வோக்ஸ்-ஐ வைத்தே கதையை முடித்தார் ஜோ ரூட்.
இப்படி நடந்திருக்காது
வேறு எந்த டெஸ்ட் போட்டியிலும் இப்படி நடந்திருக்காது என கருதப்படுகிறது. வேறு பந்துவீச்சாளர்களுக்கு ஓவரே கொடுக்காமல், வெறும் இரண்டு பந்துவீச்சாளர்களே பத்து விக்கெட்களை வீழ்த்தியது இதுவே முதல் முறை ஆக இருக்கக்கூடும்.