இங்கிலாந்து மரண பயம்
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சேஸிங்கின் போது கடைசி இரண்டு ஓவர்களில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயந்தது. அந்த அளவிற்கு வெற்றிக்கு அருகே சென்றது நியூசிலாந்து. 49வது ஓவரில் 2 விக்கெட், 50வது ஓவரில் 2 விக்கெட் எடுத்து இங்கிலாந்தை புரட்டிப் போட்டது நியூசிலாந்து.
அதிக நேரம் ஆதிக்கம்
அதே போல, போட்டியில் அதிக நேரம் ஆதிக்கம் செலுத்திய அணி எது என்று கேட்டால் நியூசிலாந்து தான். அந்த அணி பேட்டிங் செய்த போது பாதி நேரம் ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சிலும் நீண்ட நேரம் நியூசிலாந்து அணி தான் ஆதிக்கம் செலுத்தியது. கடைசி ஐந்து ஓவர்கள் முழுவதும் போட்டி நியூசிலாந்து வசம் தான் இருந்தது. அப்படி இருந்தும் நியூசிலாந்து தோல்வி அடைந்தது ஏன்?
ராஸ் டெய்லர் தீர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த இறுதிப் போட்டியில் சில சம்பவங்கள் நடைபெற்றன. ராஸ் டெய்லருக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபுள்யூ தீர்ப்பு தவறானது. இது தெரிந்தும் நியூசிலாந்து அணியின் ரிவ்யூ ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டதால், ராஸ் டெய்லர் 15 ரன்கள் எடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர் சொதப்பல்
ராஸ் டெய்லர் சம்பவம் கூட பரவாயில்லை என விட்டு விடலாம். ஆனால், கடைசி ஓவரில் மார்ட்டின் கப்தில் ரன் அவுட் செய்ய வீசிய பந்து, ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, திசை மாறி பவுண்டரி சென்றது. அதனால், இங்கிலாந்து அணிக்கு அந்த பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.
கூடுதல் ரன்கள்
இப்படி இதுவரை எங்காவது கிரிக்கெட்டில் நடந்ததுண்டா? என்று வியக்கும் அளவுக்கு நடந்தேறியது அந்த சம்பவம். ஒருவேளை அந்த கூடுதல் 4 ரன்கள் கொடுக்கப்படாமல் இருந்தால் நியூசிலாந்து வெற்றி பெற்று இருக்கும். ஆனால், போட்டி டை ஆனது.
சூப்பர் ஓவர் ஏமாற்றம்
அடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்து தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்து இருந்தாலும் மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஆனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் விதிப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியும், தோல்வியே அடையாவிட்டாலும், உலகக்கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.