முதல் ஓவரில் தாஹிர்
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. யாரும் எதிர்பாராத வகையில், முதல் ஓவரை வீச வந்தார் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்.
விக்கெட் வீழ்த்தினார்
ஒரு சுழற் பந்துவீச்சாளர் உலகக்கோப்பை தொடரின் முதல் ஓவரை வீசுவது இதுவே முதல் முறை என பலரும் தங்கள் வியப்பை சொல்லி முடிக்கும் முன், முதல் ஓவரின் இரண்டாம் பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர்.
தோனியின் திட்டம்
அப்படியே யோசித்துப் பார்த்தால், கேப்டனாக தோனி பல முறை ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் சுழற் பந்துவீச்சாளரை முதல் ஓவரில் பயன்படுத்தி இருக்கிறார். 2019 ஐபிஎல் தொடரிலும் பவர்பிளே ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை தான் பயன்படுத்தினார் தோனி.
பார்முலா
அதே பார்முலாவை பயன்படுத்திய சிஎஸ்கே வீரரான தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டு ப்ளேசிஸ், தென்னாப்பிரிக்கா அணி வீரரும், சிஎஸ்கேவின் பராசக்தி எக்ஸ்பிரஸ்-உம் ஆன இம்ரான் தாஹிரிடம் பந்தை கொடுத்தார்.
ரசிகர்கள் ஹேப்பி
இம்ரான் தாஹிரின் சுழற் பந்துவீச்சை கணிக்கத் தவறிய ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பர் டி காக்-இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட் எடுத்தவுடன் குஷியில் இம்ரான் தாஹிர் வழக்கம் போல மைதானத்தை வலம் வரத் தொடங்கினார். உலகக்கோப்பை தொடருக்கு இதை விட சிறப்பான துவக்கம் கிடைக்க முடியாது என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளத் தொடங்கினர்.
யாருக்கு விரித்த வலை?
உண்மையில், இந்த திட்டத்தின் மற்றொரு முகம் என்னவென்றால், இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் லெக் ஸ்பின் என்றால் கொஞ்சம் தடுமாறுவார். அவர்தான் முதல் ஓவரின் முதல் பந்தை சந்தித்தார்.
சிக்கியது இவர்
அவரை குறி வைத்துத் தான் இம்ரான் தாஹிர் களமிறக்கப்பட்டார். ஆனால், முதல் பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்று விட அடுத்த பந்தை சந்தித்த ஜானி பேர்ஸ்டோ தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.