ஏக்கம்
சச்சினுடன் கடைசியாக ஆடிய வீரர்களில் சேவாக், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் என பலரும் தற்போது வர்ணனையாளர்களாக கலக்கி வருகின்றனர். ஆனால், சச்சின் மட்டும் இன்னும் வர்ணனை செய்ய வரவில்லையே. நம் கிரிக்கெட் நாயகனை மீண்டும் லைவ் போட்டிகளில் பார்க்க மாட்டோமா என ஏங்கி வந்தனர்.
சிறப்பு நிகழ்ச்சி
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் சச்சின் தொடர்ந்து போட்டிகளில் வர்ணனை செய்ய உள்ளார். "சச்சின் ஓபன்ஸ் அகைன்" என்ற பெயரில் போட்டிக்கு முன்னதாக சிறப்பு நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப உள்ளனர்.
|
வர்ணனை
உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சச்சின் வர்ணனை செய்தார். அவருடன் சேவாக் - சௌரவ் கங்குலி, உள்ளிட்டோரும் இருக்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக அமைந்தது. சச்சின் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் போட்டி வர்ணனை மற்றும் விவாதங்களில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
சச்சினும், உலகக்கோப்பையும்
உலகக்கோப்பை தொடர் என்றாலே இந்திய ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் தான் நினைவுக்கு வருவார். உலகளவில் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்தது சச்சின் தான். இதுவரை 6 உலகக்கோப்பை தொடர்களில் 2278 ரன்கள் குவித்துள்ளார் சச்சின்.
உலகக்கோப்பை சாதனை
ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றதும் சச்சின் மட்டுமே. கடந்த 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் குவித்தார் சச்சின். விராட் கோலி, ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் இந்த சாதனையை நடப்பு உலகக்கோப்பை தொடரில் முறியடிப்பார்கள் என சிலர் கூறி வருகின்றனர்.
ரசிகர்கள் ஆவல்
சச்சின் டெண்டுல்கர் எப்போது இந்தியா ஆடும் போட்டிக்கு வர்ணனை செய்ய உள்ளார்? இந்திய வீரர்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார் என பலரும் ஆவலாக உள்ளனர். இந்தியாவின் முதல் உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் 5 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆடவுள்ளது இந்தியா.