இலங்கை பேட்டிங்
இலங்கை அணி பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்டது. இலங்கை 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடினாலே பெரிய சாதனை தான் என அந்த நாட்டு ரசிகர்களே கூறும் அளவுக்கு தான் முதலில் ஆடினார்கள். துவக்க வீரர்கள் கருணாரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மாத்யூஸ் அரைசதம்
அடுத்த மூன்று பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடினர். பெர்னாண்டோ அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். குசால் மென்டிஸ் 46 ரன்கள் எடுத்தார். மூத்த வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் பொறுப்பாக ஆடி, அரைசதம் கடந்து, 85 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து பந்துவீச்சு
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3, மார்க் வுட் 3, ரஷித் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தும், அவர்களுக்கு 23 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வாய்ப்பு அளித்தார் இங்கிலாந்து கேப்டன்.
தவறு
பகுதிநேர வேகப் பந்துவீச்சாளர் ஸ்டோக்ஸ் 5 ஓவர்களும், சுழற் பந்துவீச்சாளர்கள் 22 ஓவர்களும் வீசினர். இது தான் இங்கிலாந்து செய்த தவறு. வேகப் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தி இருந்தால், இலங்கை அணியை இன்னும் விரைவாக சுருட்டி இருக்க முடியும்.
துவக்கம் அதிர்ச்சி
233 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது இங்கிலாந்து. எப்படியும் இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில், துவக்க வீரர் பேரிஸ்டோ டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்களில் வெளியேறினார். ஆப்கானிஸ்தான் போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த கேப்டன் இயான் மார்கன் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பொறுப்பாக ஆடிய ஜோ ரூட்
ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். ஜோ ரூட் அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் தான் இங்கிலாந்து அணியின் பெரிய சரிவு ஆரம்பமானது.
மலிங்கா தாக்குதல்
ஏற்கனவே, துவக்க வீரர்கள் வின்ஸ், பேரிஸ்டோ, ஜோ ரூட் என மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்திய மலிங்கா, நான்காவதாக அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை வெளியேற்றினார். இங்கிலாந்து 33 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து இருந்தது.
டி சில்வா 3 விக்கெட்கள்
அடுத்து வந்த மூன்று வீரர்களை தனஞ்ஜெயா டி சில்வா வெளியே அனுப்பி வைத்தார், மொயீன் அலி 16, கிறிஸ் வோக்ஸ் 2, அதில் ரஷித் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அத்துடன் இங்கிலாந்து தோல்விக்கு அருகே சென்றது. அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் மட்டுமே கையில் வைத்துக் கொண்டு 55 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
பென் ஸ்டோக்ஸ்
இத்தனை விக்கெட்கள் வீழ்ந்தாலும், பென் ஸ்டோக்ஸ் மட்டும் தனியாக போராடி அரைசதம் கடந்து ஆடினார். 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், பொறுமையாக ஆடிய அவர், 9வது விக்கெட் வீழ்ந்த உடன் அதிரடிக்கு மாறினார். எனினும், இலங்கை 47 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்களை சாய்த்து வெற்றி பெற்றது.
அதிர்ச்சித் தோல்வி
இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் அடித்து இருந்தார். பாகிஸ்தான் அணியை தொடர்ந்து, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து. அதாவது, முக்கிய ஆசிய அணிகளிடம் தடுமாறி உள்ளது.
இலங்கை மிரட்டல்
இலங்கை அணி அரையிறுதி செல்லாது என கருதப்பட்ட நிலையில், வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தி மற்ற அணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இலங்கை அணி. அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளை தொடர்ந்தால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பெறும்.