முதல் டெஸ்ட் எதிர்பார்ப்பு
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி என்பதால் இங்கிலாந்து அணி முதல் போட்டியிலேயே வென்று தொடரை 1 - 0 என முன்னிலையில் வைத்திருக்கும் என்றே பலரும் எண்ணினர்.
அணித் தேர்வு
ஆனால், இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட்டது. அதன் காரணமாக, முக்கிய பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடுக்கு ஓய்வு அளித்து இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம் என மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
என்ன நடந்தது?
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 313 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
பிளாக்வுட்
வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் பிளாக்வுட்டின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முதல் பந்தில் இருந்தே
பிளாக்வுட் முதல் டெஸ்ட் பற்றி பேசுகையில் பென் ஸ்டோக்ஸ் தன்னை வீழ்த்த என்ன செய்தார் என கூறினார். "முதல் பந்தில் இருந்தே அவர் என் காதுகளில் பேசிக் கொண்டே இருந்தார்" என்று கூறி உள்ளார். அதாவது தன்னை சீண்டிக் கொண்டே இருந்தாராம் பென் ஸ்டோக்ஸ்.
நான் அல்ல
"அவர்கள் என்னை மோசமான ஷாட் அடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், அது என்னை எந்த இடத்திலும் பாதிக்கவில்லை. நான் ஆடச் சென்ற போது அவர்கள் தான் அழுத்தத்தில் இருந்தார்கள். நான் அல்ல" என கூறி உள்ளார் பிளாக்வுட்.
திறமையை நம்பாமல்..
இங்கிலாந்து அணி கேப்டன் திறமையை நம்பாமல் வாய் ஜாலத்தை நம்பி இருக்கிறார். அதன் காரணமாகவே இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. அதிலும், பென் ஸ்டோக்ஸ், பிளாக்வுட் 5 ரன்கள் அடித்து இருந்த போது தந்த கேட்ச்சை ஸ்லிப்பில் கோட்டை விட்டார்.
விமர்சனம்
பென் ஸ்டோக்ஸ் போட்டியில் கவனம் செலுத்தாமல் சீண்டி கோபப்படுத்தி விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தி தோற்றுள்ளார். பிளாக்வுட் இதை கூறியுள்ள நிலையில், இங்கிலாந்து ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ்-ஐ விமர்சித்து வருகிறார்கள்.