நீண்ட இடைவெளி
கிரிக்கெட் போட்டிகள் நீண்ட இடைவெளிக்கு பின் துவங்க உள்ளன. இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டு இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்க உள்ளன.
பாதுகாப்பான சூழல்
இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில், உயிர் பாதுகாப்பு சூழல் உருவாக்கப்பட்டு இரு அணிவீரர்களும் பாதுகாப்பாக விளையாட உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8 அன்று துவங்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் அணிக்குள் பயிற்சிப் போட்டிகளில் ஆடி தயாராகி உள்ளது.
இங்கிலாந்து அணி கேப்டன்
இங்கிலாந்து அணியும் ஒரு மாத காலம் பயிற்சி மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் என்றாலும், முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அவரது மனைவிக்கு இன்னும் சில தினங்களில் பிரசவம் ஆக உள்ளதால், அவர் முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார்.
பென் ஸ்டோக்ஸ்-க்கு வாய்ப்பு
அதனால், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் கேப்டனாகி உள்ளார். அவர் எதிர்காலத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தகுதி உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
உலகக்கோப்பை நாயகன்
பென் ஸ்டோக்ஸ் தான் 2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக இருந்தார். முக்கிய போட்டிகளில் மட்டுமின்றி, இறுதிப் போட்டியிலும் சரிவில் இருந்த அணியை மீட்டவர் அவர்தான். அதன் பின்னரே அவருக்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டூவர்ட் பிராடு தகவல்
பென் ஸ்டோக்ஸ் தான் முதல் டெஸ்ட்டுக்கு கேப்டன் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை சக வீரர் ஸ்டூவர்ட் பிராடு உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், அவருக்கு சிறந்த கேப்டன் மூளை உள்ளது. கடந்த சில வருடங்களில் அவர் முதிர்ச்சி அடைந்துள்ளார் என்றார்.
இரண்டாவது டெஸ்ட் கேப்டன் யார்?
முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. ஜோ ரூட் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்பதால் ஒரு வார தனிமைக்கு பின் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் அணியுடன் இணைவார் என தெரிகிறது.
இரண்டு தொடர்கள்
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடிய உடன் அடுத்து பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர்கள் வெற்றிகரமாக நடந்தால் மற்ற அணிகளும் தொடர்ந்து இதே வழிமுறையில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.