கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உச்சநிலையை எட்டியது. உலகம் முழுவதும் அப்போது ஸ்தம்பித்தது. கிரிக்கெட் விளையாட்டும் விதி விலக்கல்ல. மார்ச் 13 அன்று நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி தான் கடைசி சர்வதேச போட்டி ஆகும்.
மூன்று போட்டிகள்
இந்த நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவங்க முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வர சம்மதித்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முடிவு எட்டப்பட்டது.
உயிர் பாதுகாப்பு சூழல்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே கிரிக்கெட் தொடரை நடத்துவது அத்தனை எளிது அல்ல. இதை உணர்ந்தே இரு அணிகளும் உயிர் பாதுகாப்பு சூழல் உருவாக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் தான் போட்டி நடைபெற உள்ளது.
மழையால் தாமதம்
முதல் டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் போடும் நிகழ்வு மழையால் தாமதம் ஆனது. 117 நாட்கள் காத்திருந்த ரசிகர்களை மழை சோதித்தது. பின்னர் மூன்று மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது.
இங்கிலாந்து டாஸ் வெற்றி
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்தப் போட்டியில் ஆடவில்லை. பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஜேசன் ஹோல்டர் தலைமையில் களமிறங்கியது.