டெஸ்ட் தொடர்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடந்து வரும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் இரண்டு மைதானங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் அந்த இரு இடங்களுக்குள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
விதிமீறல்
முதல் டெஸ்ட் போட்டி எந்த சிக்கலும் இன்றி பாதுகாப்பாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வியாழன் அன்று துவங்க இருந்தது. அந்த போட்டிக்கு சில மணி நேரத்துக்கு முன் ஜோப்ரா ஆர்ச்சர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தெரிய வந்துள்ளது.
ஆர்ச்சர் நீக்கம்
ஜோப்ரா ஆர்ச்சர் தாமாகவே இதை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு 5 நாள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இது இரு அணி வீரர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஆர்ச்சர் விதிமீறல் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தெரியப்படுத்தியதாகவும் இங்கிலாந்து அணி நிர்வாகம் கூறி உள்ளது.
ஆபத்தில் சிக்க வைத்து விட்டேன்
வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த விதிமீறலை ஏற்றுக் கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொண்டுள்ளது. ஆர்ச்சர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை மட்டுமின்றி, தன் அணி மற்றும் நிர்வாகத்தையும் ஆபத்தில் சிக்க வைத்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அனைவரிடமும் மன்னிப்பு
இந்த உயிர் பாதுகாப்பு சூழலில் இருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், தன் செயலால் ஏற்படும் விளைவுகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி உள்ளார். தற்போது அவர் 5 நாட்கள் தனிமையில் இருந்து, இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
2வது டெஸ்டில் ஆர்ச்சர்
இரண்டு முறையும் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைய முடியும். ஆர்ச்சரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சேர்த்து இருந்தது. மார்க் வுட் மற்றும் ஆண்டர்சனை நீக்கி இருந்தது.
சிக்கல்
முதல் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் இரண்டாவது இன்னிங்க்ஸில் மிரட்டலாக பந்து வீசி இருந்தார். 17 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது ஆர்ச்சர் இல்லாத நிலையில் இங்கிலாந்து அணி சிக்கலில் உள்ளது.
அணி தேர்வு
ஸ்டூவர்ட் போராடு, கிறிஸ் வோக்ஸ் இருவரையும் அணியில் நிச்சயமாக தேர்வு செய்யக் கூடும். சாம் கர்ரன், ஓளி ராபின்சன் இருவரில் ஒருவரை தேர்வு செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இங்கிலாந்து உள்ளது.