டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சுமார் நான்கு மாதங்கள் கழித்து நடக்கும் முதல் சர்வதேச தொடர் இதுதான். கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் இந்த தொடர் பாதுகாப்பாக நடந்து வருகிறது.
உயிர் பாதுகாப்பு சூழல்
இங்கிலாந்து அரசிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு சிறப்பு அனுமதி வாங்கி உள்ளது. கடும் விதிமுறைகளை பின்பற்ற இருப்பதாக கூறியே அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் அந்த விதிமுறைகளை பின்பற்றியே முதல் டெஸ்ட் போட்டியில் ஆடின.
ஆர்ச்சர் செய்த தவறு
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்கள் தங்கள் கார்களில் மான்செஸ்டர் நகருக்கு தனித்தனியே பயணம் செய்தனர். அதில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் நடுவே 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டுக்கு சென்று காதலியை பார்த்து விட்டு வந்ந்துள்ளார்.
நீக்கம்
இந்த தகவல் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க சில மணி நேரங்களுக்கு முன்பே இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்கிய நிர்வாகம், அவரை ஐந்து நாள் தனிமையில் வைத்துள்ளது.
இங்கிலாந்து அணி செய்த தவறு
ஜோப்ரா ஆர்ச்சர் இந்த தவறை செய்ய காரணமே, இங்கிலாந்து வீரர்கள் தனித்தனியே கார்களில் மான்செஸ்டர் செல்ல வேண்டும் என்ற இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பின் திட்டம் தான். இங்கிலாந்து வீரர்களை ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் எளிதாக அழைத்துச் சென்று இருக்க முடியும்.
ஹோல்டிங் விளாசல்
அதைக் குறிப்பிட்டுத் தான் விளாசி இருக்கிறார் மைக்கேல் ஹோல்டிங். ஜோப்ரா ஆர்ச்சரையும் அவர் விட்டு வைக்கவில்லை. "எனக்கு பாவமாகவே தோன்றவில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை ஏன் சிலருக்கு செய்ய முடியவில்லை என எனக்கு புரியவில்லை." என ஆர்ச்சரை வெளுத்தார்.
ஹோல்டிங் கேள்வி
"நான் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இந்த விதிமுறைகள் இருக்க வேண்டும் தான். ஆனால், அதில் கொஞ்சம் லாஜிக் இருக்க வேண்டும். இங்கிலாந்து அணி ஏன் ஒரு பேருந்தில் சென்று இருக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் ஹோல்டிங்.
ஏன் கார்?
"அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனையை முடித்து விட்ட நிலையில், ஆறு போட்டிகளுக்கு ஒன்றாக ஆட வேண்டும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஒன்றாக ஏன் பேருந்தில் சென்று இருக்கக் கூடாது? அவர்கள் காரில் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது? மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்" என்றார் மைக்கேல் ஹோல்டிங்.