முதல் டெஸ்ட்
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் சுதாரித்த இங்கிலாந்து அணி 313 ரன்கள் குவித்தது.
வெ.இண்டீஸ் வெற்றி
வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளாக்வுட் சிறப்பாக ஆடி 95 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.
பிராடு நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை நீக்கி இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது தான் போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹுசைன் கேள்வி
இது குறித்து கேள்வி எழுப்பினார் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன். "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு என் வாழ்த்துக்கள். சிறப்பான செயல்பாடு. ஆனால், இங்கிலாந்து அணியை நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும். இது ஆஷஸ் தொடரின் முதல் போட்டி என்றால் ஸ்டூவர்ட் பிராடை நீக்கி இருப்பீர்களா?" என கேட்டுள்ளார்.
டாஸ் முடிவு
"பிராடு ஆடி இருந்தால் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வீழ்ந்து இருக்கும். பிராடு இல்லாததால் டாஸ் 50 - 50 ஆக மாறி விட்டது." என பென் ஸ்டோக்ஸ் முடிவால் ஏற்பட்ட பாதிப்பை விளக்கினார் ஹுசைன்.
குறைத்து மதிப்பிட்ட ஸ்டோக்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிட்டதால் தான் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரருக்கு ஓய்வு கொடுத்தார் என்பதே நாசிர் ஹுசைன் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு. ஆனால், அதை வெஸ்ட் இண்டீஸ் அணி பயன்படுத்திக் கொண்டது.
பின்னடைவு
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் போட்டியிலேயே பின் தங்கி இருப்பதால் அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கும் பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.