இங்கிலாந்து - வெ.இண்டீஸ் தொடர்
இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஜோ ரூட் தனிப்பட்ட காரணங்களால் விலகினார். துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
பிராடு நீக்கம்
முதல் போட்டிக்கு மட்டுமே கேப்டன் ஆன பென் ஸ்டோக்ஸ், அணியை தேர்வு செய்கையில் அதிர்ச்சி முடிவை எடுத்தார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை அணியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதில் ஜோப்ரா ஆர்ச்சர் வாய்ப்பு பெற்றார். இது யாருமே எதிர்பாராத மாற்றம் ஆகும்.
இரவில் வந்த தகவல்
மேலும், இந்த தகவல் ஸ்டூவர்ட் பிராடுக்கு போட்டிக்கு முந்தைய தின இரவில் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தகவலைக் கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார். விமர்சகர்களும் இந்த முடிவை எதிர்பார்க்காததால் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.
சிறந்த பந்துவீச்சாளர்
ஸ்டூவர்ட் பிராடு இங்கிலாந்து அணியில் ஆண்டர்சனுக்கு பின் அதிக அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர். மேலும், நல்ல பார்மில் இருக்கிறார். கடைசியாக அவர் ஆடிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர், இரண்டிலும் இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் அவர்தான். அந்த தொடர்களின் வெற்றியில் அவர் பங்கு அதிகம்.
51 போட்டிகள்
மேலும், இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து 51 டெஸ்ட் போட்டிகள் ஆடி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் டெஸ்ட் வீரர் என்ற பெருமையையும் தக்க வைத்திருந்தார். அந்த சாதனைக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
எதிர்காலம் என்ன?
இது பற்றி பேசிய ஸ்டூவர்ட் பிராடு, முந்தைய நாள் இரவு ஆறு மணிக்கு பென் ஸ்டோக்ஸ் உங்களை அணியில் தேர்வு செய்யவில்லை என கூறியதாகவும், இது குறித்து தான் பயிற்சியாளருடன் பேசியதாகவும் கூறினார். எதிர்காலம் என்ன என தான் கேட்டதற்கு, நேர்மறையாகவே பதில் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும் ஏமாற்றம்
தான் எளிதில் உணர்ச்சிவசப்படும் நபர் இல்லை என்றாலும், கடந்த இரு நாட்கள் மிகவும் கடினமாக இருப்பதாகவும், ஏமாற்றம் என்பது கூட குறைவான வார்த்தை தான் எனவும் கூறி இருக்கிறார் ஸ்டூவர்ட் பிராடு. இந்த தருணத்தில் தான் கோபமாக இருப்பதாகவும் கூறினார்.
கோபம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் தன் சிறந்த பந்துவீச்சை அளித்து வந்ததாகவும், இது புரிந்து கொள்ள கடினமான முடிவு என்பதால் எரிச்சல் மற்றும் கோபத்தில் பொங்கி வருவதாகவும் கூறினார். தான் ஆஷஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வெற்றிகளில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதுவதாகவும் கூறினார்.
எனக்கு அணியில் இடம்
மற்றவர்களைப் போல தனக்கும் அணியில் இடம் வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் கூறினார். முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் ஸ்டூவர்ட் பிராடு நீக்கம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். சிறந்த பந்துவீச்சாளரை எப்படி நீக்க முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முந்தைய சர்ச்சை
முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பிராடு - பென் ஸ்டோக்ஸ் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சமாதானம் ஆனார்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இருக்குமா? என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.