4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் வீரர்கள் கடந்த போட்டியை போல இல்லாமல் ஓரளவிற்கு சிறப்பாகவே விளையாடினர்.
லாரன்ஸ், போப் சிறப்பு
பென் ஸ்டோக்ஸ் அரைசதத்தை அடித்த நிலையில், லாரன்ஸ் 46 ரன்கள், ஓலி போப் 29 ரன்கள் என்று ஓரளவிற்கு நிலையான ஆட்டத்தை கொடுத்தனர். ஆயினும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்பு அவர்களது ஆட்டம் செல்லுபடி ஆகவில்லை.
ஜோ ரூட் 50வது போட்டி
இதையடுத்து 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது ஆட்டத்தை முடித்துள்ளது இங்கிலாந்து அணி. இன்றைய போட்டியில் கேப்டனாக தனது 50வது போட்டியை ஆடிய அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 5 ரன்களில் தனது விக்கெட்டை சிராஜிடம் பறிகொடுத்தார்.
ரன்களை சுருக்கிய பௌலர்கள்
இந்திய பௌலர்கள் அக்சர் படேல், ரவி அஸ்வின், முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முறையே 4, 3, 2, 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் ரன்களையும் சுருக்கினர். இதையடுத்து ரன்களை அடிக்க இங்கிலாந்து அணி வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.