சறுக்கிய இங்கிலாந்து
நாட்டிங்கமில் இன்று தொடங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில், ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார். ரோரி பர்ன்ஸ் க்ளீன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால், இங்கிலாந்து ரன் கணக்கை தொடங்காமலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. பிறகு முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பந்து வீசத் தொடங்கினர். இதில், சிராஜ் ஓவரில் க்ராலே 27 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்.
183 ரன்கள்
உணவு இடைவேளைக்கு பிறகு, இங்கிலாந்தின் நிலைமை மேலும் மோசமானது. புஜாரா போல ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் போட்டு விளையாடி வந்த சிப்லே, ஷமி ஓவரில் அவுட்டானார். இதன் பிறகு களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ, ரூட்டுடன் இணைந்து ஓரளவு பாஸிட்டிவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவரை 29 ரன்களில் ஷமி எல்பிடபிள்யூ செய்ய, இதன் பிறகு இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. டேனியல் லாரன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினர். இடையில் சாம் கர்ரன் மட்டும் (அதாங்க நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் "சுட்டிக் குழந்தை") 27 ரன்கள் எடுத்து தாக்குப்பிடிக்க, ஓலே ராபின்சன் 0, ஸ்டூவர்ட் பிராட் 4, ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 1 என்று அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அசத்திய ஷமி
இதில் பும்ராவின் பவுலிங் அட்டகாசம் என்றால் மிகையாகாது. ஜோஸ் பட்லருக்கு அவர் கொடுத்த டார்ச்சரை பார்த்து, கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே சிரித்துவிட்டார். கடைசியில், ஒன்றுமே செய்ய முடியாமல் பட்லர் 0 ரன்னில் பும்ரா ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். இந்த க்ரீன் டாப் பிட்ச்சில் டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்ததன் காரணம் இதுவரை புரியவில்லை. இதில், ஆச்சர்யம் என்னவெனில், "நாங்கள் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம்" என்று கோலியும் கூறியது தான்.
350 - 380
இங்கிலாந்தை 183 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இப்போட்டியில் தாக்குப்பிடிக்க முடியும். குறைந்தது முதல் இன்னிங்ஸில் 350 - 380 ரன்கள் வரை அடித்துவிட்டால், இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடைசி ஒருமணி நேர ஆட்டம் மீதமிருந்ததால், எப்படியாவது ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால், ரோஹித், ராகுல் இருவரும் மிக நேர்த்தியாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இருவரும் தலா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.