தடுமாறிய தொடக்கம்
இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற பும்ரா, ஆக்ரோஷமாக பந்துவீசி அசத்தினார். அலெக்ஸ் லீஸ் 6 ரன்களிலும், சாக் கிராலி 9 ரன்களிலும், ஆலிவ் போப் 10 ரன்களிலும் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோ ரூட் பொறுப்பாக விளையாடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பார்ட்னர்ஷிப்
ஆனால் ரூட் 31 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேற, நைட் வாட்ச் மேனாக வந்த ஜேக் லீச்சும் ஷமி பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து 84 ரன்களக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. கேப்டன் ஸ்டோக்ஸ், பாரிஸ்டோ ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க முயற்சி செய்தனர்.
பாரிஸ்டோ சதம்
கேப்டன் ஸ்டோக்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அடித்த பந்தை பும்ரா அபாரமாக கேட்ச் பிடிக்க, இந்த கூட்டணி பிரிந்தது. இதனால் மறுபுறம் பாரிஸ்டோ அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினார். இதனால் இங்கிலாந்து அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. சிறப்பாக விளையாடிய பாரிஸ்டோ 119 பந்துகளில் சதம் விளாசினார். ஷமி பந்தில் 106 ரன்கள் எடுத்த ப்ரிஸ்டோ ஷமி பந்தில் பெவிலியன் திரும்பினார்
சிராஜ் 4 விக்கெட்
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் சரிவு மீண்டும் தொடங்கியது. இந்திய வீரர் முகமது சிராஜ், வெறித்தனமாக பந்துவீசி, இங்கிலாந்தின் பின்வரிசை வீரர்களை கொத்தாக தூக்கினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடுகிறது. இந்திய அணி ஒரு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி கிடைக்கும். குறைந்தது, 300 ரன்களுக்கு மேலாவது இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.