117 நாட்களுக்கு பிறகு போட்டி
இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மீண்டும் துவங்கியுள்ளது. இந்த போட்டி மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக 17.4 ஓவர்களுக்குள் முடிக்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இயக்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தையடுத்து பல்வேறு நாடுகளில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் வலுப் பெற்றுள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில், லோகோக்களை தங்களது டி-சர்ட்டுகளில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அணிந்திருந்தனர்.
மண்டியிட்டு ஆதரவு
மேலும் போட்டி துவங்குவதற்கு முன்னதாக மண்டியிட்டு தங்களது ஆதரவை பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு தெரிவித்தனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த, முன்னாள் மேற்கிந்திய ஜாம்பவான் மறைவிற்கும் போட்டியின் துவக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக 3 மணிநேரங்கள் தாமதமாக துவங்கியது.
வானிலை ஆய்வாளர்கள் அறிவிப்பு
முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களும் ஜோ டென்லே 14 ரன்களும் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது நாளான இன்றும் அவர்களது பார்ட்னர்ஷிப் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் மழை பொழியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.