லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி துவங்க உள்ள நிலையில், டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருந்த ஆதில் ரஷீத்தை மீண்டும் விளையாட வரும்படி இங்கிலாந்து அணி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என வென்றது. அடுத்த நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் இங்கிலாந்து 2-1 என வென்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான அணியை இங்கிலாந்து இன்னும் அறிவிக்கவில்லை.
ஒருதினப் போட்டித் தொடரில் அபாரமாக பந்து வீசி அசத்தினார் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத். அவரை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்காக முயற்சிகள் நடந்து வருகின்றன.
மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் 38 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரஷீத், கடைசியாக 2016ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பிறகு டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதனால், வெள்ளைப் பந்து போட்டிகளான கவுண்டியில் விளையாடி வருகிறார். ஒருதினப் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், கவுண்டி அணியான யார்க் ஷயர் அணிக்காக விளையாடி வரும் ரஷீத், இன்று நடந்த ஆட்டத்தில் 3 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.