மோசமான தோல்வி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3வது டி20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து. அதிலும், கடைசி டி20 போட்டியில் வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சரண்டரானது.
வெறுக்கத்தக்க சாதனை
சரி.. டி20 கோப்பை தான் போச்சு. ஒருநாள் தொடரிலாவது ஏதாவது குட்டிக்கரணம் அடிக்கும் என்று பார்த்தால், முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது இலங்கை. தொடரையும் பறிகொடுத்துவிட்டது. இந்த தோல்வியின் மூலம், ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 428 போட்டிகளில் தோற்றிருக்கிறது. உலகின் வேறு எந்த அணிகளையும் விட, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்ற அணி எனும் வெறுக்கத்தக்க சாதனையை இலங்கை படைத்திருக்கிறது.
இரு உலகக் கோப்பை
50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என்று இரு கோப்பைகளை வென்ற அணி அது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாக செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாக சென்றுவிட்டது.
புஸ்ஸான கதை
கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் கைப்பற்றிய கோப்பைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2014க்கு பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை. குறைந்தபட்சம் இந்தியா போன்று கன்சிஸ்டன்சியான ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தவில்லை. சமீபத்தில் வங்கதேசம் சென்று அந்த அணிக்கு எதிராக கூட சரண்டராகி புஸ்ஸாகிப் போன இலங்கை, இப்போது இங்கிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகியிருக்கிறது. இவர்கள் தோற்பது கூட பெரிய விஷயமல்ல. ஆனால், எந்தவித போராட்டமும் இன்றி, 'இந்தா வச்சிக்க' என்று தோற்பது தான் ரசிகர்களை வேதனைப்படுத்துகிறது.
கானல் நீர்
ஏற்கனவே, இலங்கையில் தொடர் தோல்வியால், சமூக தளங்களில் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை இனி பின் தொடரப் போவதில்லை என்ற பிரசாரத்தை இலங்கை ரசிகர்கள் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த மோசமான சாதனை மேலும் அவர்களை புண்படுத்தி இருக்கிறது. அணி மீதான அவர்களின் நம்பிக்கையும் கானல் நீராகிவிட்டது.