3வது நாள் ஆட்டம்
கொரோனா பாதிப்பிற்கு பிறகு 117 நாட்கள் கழித்து கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் டெஸ்ட் போட்டிகள் துவங்கியுள்ளன. மற்ற நாடுகள் மீண்டும் போட்டிகளை துவக்க அச்சத்துடன் காத்திருக்கும் சூழலில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதை சாதித்துள்ளது. இதன்மூலம் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
எச்சில் பயன்பாட்டிற்கு தடை
இந்நிலையில் ஐசிசியின் பல்வேறு கட்டுப்பாடுகளும் துவங்கியுள்ள இந்த போட்டி, உலக அளவில் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆண்டாண்டு காலங்களாக பயன்பாட்டில் இருந்த பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்படுத்தும் வழிமுறைக்கு பாதுகாப்பை காரணம் காட்டி ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பௌலர்கள் நிலை திண்டாட்டமாக மாறிவிடும் என்றும் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.
முதுகு வியர்வை
இதனிடையே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பௌலிங் போடும் இங்கிலாந்து வீரர்கள், எச்சிலுக்கு பதிலாக பந்தை ஷைன் செய்ய முதுகின் வியர்வையை பயன்படுத்தியுள்ளனர். முதலில் பௌலிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, இதுபோன்ற எந்த முயற்சியையும் செய்யவில்லை. மாறாக 204 ரன்களில் இங்கிலாந்தையும் சுருட்டியுள்ளது.
விக்கெட்டுக்கு முக்கியத்துவம்
இந்நிலையில், எச்சிலுக்கு பதிலாக முதுகின் வியர்வையை இங்கிலாந்து பௌலர்கள் பயன்படுத்துவதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதுகு வியர்வை மட்டுமின்றி ஆன்டர்சன் மற்றும் ஆர்ச்சரின் முதுகு வியர்வையையும் தான் எடுத்து பந்தை ஷைன் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு முக்கியத்துவம் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.