கராச்சி: இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பிஎஸ்எல் போட்டியில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனாவைரஸ் அறிகுறிகள் இருந்ததாக கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா.
போட்டியின் பாதியிலேயே அவர் நாடு திரும்பி விட்டார். இந்த அறிகுறி காரணமாகவே அவர் நாடு திரும்பியிருக்கலாம் என்பது ரமீஸின் சந்தேகமாகும். தற்போது பிஎஸ்எல் தொடரின் நாக் அவுட் போட்டிகளை தள்ளி வைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்பது நினைவிருக்கலாம்.
லாகூரில் ரமீஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாக் அவுட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், கராச்சி கிங்ஸ் அணியில் ஆடிய அலெக்ஸ் போட்டித் தொடரின் பாதியிலேயே நாடு திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. உலகம் முழுவதும் இது பரவி வருகிறது. எனவே இதை கவனத்துடன் அனைவரும் அணுக வேண்டும் என்றார் ரமீஸ் ராஜா. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயலதிகாரி வாசிம் கான் கூறுகையில், ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவரது பெயரையும், நாட்டையும் வாசிம் கான் வெளியில் சொல்லவில்லை.
வாசிம் கான் கூறுகையில், பிஎஸ்எல் தொடரின் போட்டிகள் காலி மைதானங்களில் நடத்தப்பட்டாலும் கூட அனைத்துப் போட்டிகளிலும் நல்ல முறையிலேயே நடந்தேறின. தற்போது நாக் அவுட் போட்டிகளை மட்டும் ஒத்தி வைத்துள்ளோம். இப்போது போட்டிகளை நடத்துவது சரியாக இருந்திருக்காது. மேலும் ரசிகர்கள் இல்லாமல் நாக் அவுட் போட்டிகள் நடந்தால் சரியாகவும் இருக்காது. எனவேதான் ஒத்திவைக்கப்பட்டது என்றார்