|
மைக்கேல் வான் போட்ட பதிவு
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிரியான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், "ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஒரே நாளில் தோல்வி அடைந்தால் ஒரு பீர் சாப்பிட்டு கொண்டாடலாம்" என தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு போட்டிகள் எவை?
மேற்சொன்ன இரு போட்டிகளில் ஆடவர் அணி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியை இழந்துள்ளது. அதற்கு முன்னதாக ஒருநாள் தொடரை 2-1 என இழந்து இருந்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்திய மகளிர் அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் தோல்வி அடைந்தது. இதில் தோல்வி அடைந்தாலும், ஆஸ்திரேலியா மகளிர் உலக டி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பகையாளி ஆஸி. - இங்கிலாந்து
பகையாளி ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோல்வி அடைவதை கொண்டாடி வருகிறார் மிக்கேல் வான். இதற்கு காரணம், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஒரு வித உரசல் இருந்து வருகிறது. இரண்டு நாடுகளும் தங்கள் பகையை ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் தான் வெளிப்படுத்தி தீர்த்துக் கொள்வார்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் சோகம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு முழுவதும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளப் பிரச்சனையை கிளப்பினர். அதன் பின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பந்து சேத விவகாரம் எழுந்தது. அதையொட்டி, ஸ்மித், வார்னர் மற்றும் பான்க்ராப்ட் தடை பெற்றனர். அதன் பின் முக்கிய வீரர்கள் அற்று, மன உளைச்சலில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி அடி மேல் அடி வாங்கி வருகிறது. அவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி மகிழ்ந்திருக்கிறார் மைக்கேல் வான்.
இந்தியாவிடம் அடி வாங்குமா ஆஸி?
ஆஸ்திரேலிய அணி இதுவரை வாங்கிய அடியை விட மோசமான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்திய அணி வலுவாக இருப்பதாகவே கருதப்படுகிறது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.