வீரர்களுக்கு கொரோனா
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்குள் கொரோனா நுழைந்துவிட்டது. அந்த அணியை சேர்ந்த வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாகிகள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்கள் குவாரண்டைன்
இதனையடுத்து இலங்கை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்தின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் பாகிஸ்தான் அணியுடனான தொடர் நடைபெறவிருக்கும் சூழலில் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களான மோர்கன், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், சாம் கரண் உள்ளிட்ட அனைவரும் குவாரண்டைனில் சிக்கியுள்ளனர்.
இப்படி ஒரு அணியா?
இந்நிலையில் ஒரே இரவில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட புதிய அணியை உருவாக்கியுள்ளது இங்கிலாந்து. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் 9 வீரர்களுக்கு, இது முதல் சர்வதேச போட்டி ஆகும். 2 பேர் மட்டுமே ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவர். இந்த அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்தவுள்ளார். தற்போது ஓய்வு விடுமுறையில் உள்ள இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இளம் வீரர்கள்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகவும் பலவீனமான அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது. இதுமட்டுமல்லாமல் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்படும் பென் ஸ்டோக்ஸ் கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் இங்கிலாந்தின் இளம் வீரர்கள், அறிமுக போட்டியிலேயே அசத்துவதால் சற்று எதிர்ப்பார்ப்பும் எகிறியுள்ளது.