ஐரோப்பாவில் கொரோனா
கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இங்கிலாந்து நாட்டிலும் 35,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமருக்கும் பாதிப்பு
அங்கே பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இந்த நோயால் பலர் இறந்தும் வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனால், யாரும் அதை மதிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எச்சரிக்கை
இத்தாலி, ஸ்பெயின் நிலை தங்கள் நாட்டிற்கு வராது என நினைத்து ஊறி சுற்றி வருகிறார்கள். ஆனால், ஆய்வு முடிவுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் அடுத்த இத்தாலியாக இங்கிலாந்து மாற அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்து வருகின்றன.
ஊர் சுற்றி வந்த மக்கள்
தன் நாட்டு மக்கள் தனிமையில் இருக்காமல், ஊர் சுற்றி தங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி, அடுத்தவர்களுக்கும் அதை பரப்பும் அபாயத்தில் இருப்பதை கண்டு பொங்கி உள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் வின்ஸ்.
சுயநலமான மக்கள்?
அவர் கூறுகையில், எல்லாமே இயல்பாக இருப்பது போல மக்கள் வெளியே சுற்றி வரும் புகைப்படங்களை பார்த்தேன். என்ன ஒரு சுயநலமான மக்கள்? இப்போது அவர்கள் தீவிரத்தை உணர்ந்து இருப்பார்கள் என நம்புகிறேன். வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு என் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.