அமீரகம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. அப்போது வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன. இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2-ம் கட்ட போட்டிகள், அக்டோபர் 8-ம் தேதி நிறைவடைகிறது.
வங்கதேச சீரிஸ் ஒத்திவைப்பு
இந்த 2ம் கட்ட தொடரில், தங்கள் நாட்டு வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஜூன் மாதமே இங்கிலாந்து வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. சர்வதேச தொடர்கள் இருப்பதால், அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் இங்கிலாந்து வாரியம் கூறியது. இந்நிலையில், செப்டம்பர் முதல் அக்டாபர் வரை நடைபெறுவதாய் இருந்த இங்கிலாந்து vs வங்கதேச தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இரு கிரிக்கெட் வாரியங்களும் கலந்து பேசி சுமூகமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகையால், ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதியாகயுள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகள் நடக்கும் அதே மைதானத்தில்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்க இருப்பதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பங்கேற்பு உறுதி
இதுகுறி்த்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் பங்கேற்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, ஒப்புதலை ஜெய்ஷா பெற்றுள்ளார்" எனத் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில் ஏராளமான இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்றுள்ளதால், அவர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் இதில் மிஸ்ஸாவார் என்று தெரிகிறது. ஏனெனில், அவர் மன அழுத்தத்தை காரணம் காட்டி கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலகி இருக்கிறார்.
முன்வைத்த வாதம்
இங்கிலாந்தின் இந்த திடீர் மன மாற்றத்திற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா என்று கூறப்படுகிறது. பிசிசிஐ சார்பில் இங்கிலாந்து வாரியத்துடன் பேசி, அவர்களை சம்மதிக்க வைத்திருப்பதாக தெரிகிறது. இங்கிலாந்து முதலில் தயக்கம் காட்டினாலும், வங்கதேசத்துடனான தொடரை விட, ஐபிஎல் மூலம் வருவாய் மற்றும் வீரர்களின் பயிற்சி என இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற வாதம் ஜெய் ஷா தரப்பில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையும் இதே அமீரகத்தில் நடைபெறுவதால், கூட்டிக் கழித்துப் பார்த்தால், தங்களது கறார் மனநிலையை விட்டு பின்வாங்குவதே அணிக்கு நல்லது என்பதை இங்கிலாந்து உணர்ந்து தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே vs மும்பை
அமீரகத்தில், 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. துபாயில் தகுதிச்சுற்று(அக்.10) மற்றும் இறுதி ஆட்டம் உள்பட 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் தொடக்க ஆட்டம் செப்.24ம் தேதி நடைபெறுகிறது. தகுதிச்சுற்று 2வது ஆட்டம்(அக்.11), மற்றும் எலிமினேட்டர்(அக்.13) சுற்றும் நடக்கிறது.