பயிற்சியின் போது ரோரி பர்ன்ஸ் காயம்
கடந்த வாரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா -இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியையொட்டி கேப் டவுனில் நடைபெற்ற கால்பந்து பயிற்சியில் பங்கேற்ற இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்சுக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
பர்ன்சுக்கு அறுவை சிகிச்சை
இதையடுத்து லண்டனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரோரி பர்ன்சுக்கு நேற்று பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 4 மாதங்கள் முழுமையான ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடுமையான விமர்சனங்கள்
ஏற்கனவே கடந்த 2018ல் நடைபெற்ற இலங்கை தொடரின்போது கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டபோது இதேபோல காயமடைந்த ஜோனி பேர்ஸ்டோ பல போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போது ரோரி பர்ன்சுக்கு காயமேற்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு
கடுமையான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களை அடுத்து கால்பந்தாட்ட பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
ரோரி பர்ன்ஸ் நீக்கம்
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் இலங்கையில் இங்கிலாந்து அணியினர் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் ரோரி பர்ன்ஸ் இடம்பெற மாட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கீட்டன் ஜென்னிங்ஸ் இடம்பிடிப்பு
இதனிடையே, இலங்கையில் மார்ச் 19ம் தேதி துவங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்ன்சுக்கு மாற்று வீரராக கீட்டன் ஜென்னிங்க்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.