இங்கிலாந்து தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் 2வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வழங்கிய போதிலும் இந்திய பௌலர்கள் அவர்களின் ரன்களை சுருக்கி 164 ரன்களில் ஆட்டத்தை முடித்தனர்.
இந்தியா சிறப்பான பேட்டிங்
போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயான் மார்கன், பனிப்பொழிவு உள்ளிட்ட எந்த தடையும் இல்லாத நிலையிலும் சிறப்பான போட்டியை அளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார். இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதே அவர்களது வெற்றிக்கு காரணம் என்றும் கூறினார்.
இங்கிலாந்து வீரர்கள் தடுமாற்றம்
இந்தியாவின் ஸ்லோ பிட்ச்களில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாகவும், ஆனால் இந்த பிட்ச்களில் சிறப்பாக விளையாடுவதற்கு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் கற்று தேர்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறப்பாக பொருந்திய பிட்ச்
கடந்த போட்டியில் இந்த மைதானத்தின் பிட்ச் சிறப்பாக பொருந்தியதாகவும் அதனால்தான் சிறந்த ஆட்டத்தை வழங்க முடிந்ததாகவும் மார்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியின் ஸ்லோ பிட்ச் தாங்கள் பாதுகாப்பாக விளையாடுவதில் இருந்து தங்களை தள்ளி வைத்ததாகவும் சிறிது சிறிதாக இத்தகைய பிட்ச்களில் விளையாட பழகுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வியப்படையவில்லை
மேலும் நேற்றைய போட்டியில் இஷான் கிஷனின் ஆட்டம் குறித்து பாராட்டு தெரிவித்த இயான் மார்கன், அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதை சுட்டிக் காட்டினார். அறிமுக வீரராக அவர் விளையாடிய அதிரடி ஆட்டம் தன்னை வியப்பிற்குள்ளாக்கவில்லை என்றும் கூறினார். அவர் நேற்றைய போட்டியின்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிக்கு இடையிலான இடைவெளியை மட்டும் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.