லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஆதில் ரஷீத் மற்றும் மோயின் அலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. டி-20 போட்டித் தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.
முதல் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதில் ரஷீத் மற்றும் மோயின் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். எசக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி போர்டர் அறிமுகமாகிறார்.
இங்கிலாந்துக்காக 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆதில் ரஷீத், கடைசியாக 2016ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பிறகு, அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால், அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஷ் தொடரில் சொதப்பியதால் மோயின் அலிக்கு வாய்ப்பு தரப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து அணி விபரம்:
ஜோ ரூட் (கேப்டன்), மோயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்சன், ஜானி பிரிஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டார்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலெஸ்டர் குக், சாம் குர்ரான், கீடான் ஜென்னிங்ஸ், டாவிட் மாலன், ஜேமி போர்டர், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ்.