வரும் 8ம் தேதி துவக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் வரும் 8ம் தேதி சௌதாம்ப்டனில் முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இந்த தொடர் சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' லோகோ
அனைவரது கவனமும் இந்த தொடரில் இருக்கும்நிலையில், இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், மேற்கிந்திய தீவுகள் அணியினர் வரும் 8ம் தேதி துவங்கவுள்ள போட்டியில் தங்களது டி-சர்ட்டில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' என்ற விழிப்புணர்வு லோகோவை அணியவுள்ளனர். நிறத்தை வைத்து மனிதர்களை எடைபோடும் தாக்குதல்கள் மறைய வேண்டும் என்று கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் போர்டும் தெரிவித்துள்ளது.
இசிபி அறிவிப்பு
ஐசிசியும் இந்த லோகோவை அணிய ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களமிறங்கும் இங்கிலாந்து அணி வீரர்களும் இந்த லோகோவை அணியவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இங்கிலாந்து வீரர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகோவை அணிந்த அணி வீரர்கள்
அலிசா ஹோசன்னா என்பவர் வடிவமைத்துள்ள இந்த லோகோ, சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. கொரோனாவால் கைவிடப்பட்டு இந்த வாரத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ள பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள அணி வீரர்களும் தங்களது டி-சர்ட்டில் இந்த லோகோவை அணிந்து 'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.