பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அயல்நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணி 2002ம் ஆண்டுக்கு பிறகு (18 வருடங்களுக்கு பிறகு) தற்போது தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால் போட்டி தொடங்குவதற்கான கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
என்ன காரணம்
பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை, என்றும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் கூறுவது தவறுதான், ஆனால் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும் தொடரை ரத்து செய்துகொண்டு தாய் நாட்டிற்கும் கிளம்பிவிட்டது.
அடுத்த ஆப்பு
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாகிஸ்தான் அணி மீளாத சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் இந்த தொடர் நடைபெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முடிவு
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பாதுகாப்பு காரணமாக நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்ததை நாங்கள் அறிந்தோம். இங்கிலாந்தின் பாதுகாப்பு குழுவினர் பாகிஸ்தானின் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். எனவே 2 நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விளக்கம்
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்திருந்த பாகிஸ்தான் வாரியம், உலகின் சிறந்த உளவுத்துறை எங்கள் நாட்டில் உள்ளது. அனைத்து நாட்டு அணிகளுக்கும் வழங்கக்கூடிய உச்சக்கட்ட பாதுகாப்பை தான் நியூசிலாந்து அணிக்கு வழங்கினோம். ஆனால் நியூசிலாந்து இதுபோன்று அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த தொடரை நடத்தி முடிக்கவே பாகிஸ்தான் வாரியம் விரும்புகிறது எனத்தெரிவித்துள்ளது.