இன்றைய போட்டி
இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதேநேரம் வங்கதேசம் சூப்பர் 12இல் தனது முதல் போட்டியில் இலங்கையிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. க்ருப் பி பிரிவில் இங்கிலாந்து முதல் இடத்திலும், வங்கதேசம் 5ஆம் இடத்திலும் உள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வங்கதேசம் இந்த போட்டியில் வென்றே தீர வேண்டும்.
அணிகள்
இங்கிலாந்து - ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஈயான் மோர்கன் (கே), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷித், டைமல் மில்ஸ்
வங்கதேசம்- முகமது நைம், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், முகமுதுல்லா (கே), அபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹேதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், நசும் அஹ்மது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் ஒரே மாற்றமாக சைஃபுதீனுக்கு பதில் ஷோரிபுல் இஸ்லாம் களமிறங்குகிறார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆரம்பமே அதிர்ச்சி
ஆரம்பத்திலேயே வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லிட்டன் தாஸ் 9 ரன்களிலும் மற்றும் முகமது நைம் 5 ரன்களிலும் அடுத்தடுத்து மொயின் அலி பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். கேப்டன் முகமுதுல்லாவும் முஷ்பிக்கூர் ரஹீமிமும் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர்.
திணறிய வங்கதேசம்
இருப்பினும் அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறப்பாக ஆடி வந்த முஷ்பிக்கூர் ரஹீம் 29 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் வங்கதேசம் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. அடில் ரஷித் வீசிய 19ஆவது ஓவரில் நாசூம் அகமது சற்றே அதிரடி காட்ட, அந்த ஓவரில் மட்டும் வங்கதேசம் 17 ரன்களை சேர்த்தது. இருப்பினும், அடுத்த ஓவரை மில்ஸ் மிகச் சிறப்பாக வீசினார். இந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 2 விக்கெட்களை சாய்த்தார்.
இங்கிலாந்து கலக்கல்
20 ஓவர் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது. அந்த அணியன் ஜேசன் ராய் மற்றும் பட்லர் அதிரடியான தொடக்கத்தை அமைத்தனர். 5 ஓவரில் நாசூம் அகமது பந்துவீச்சில் 18 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு டேவிட் மாலனுன்ட பாட்னஷிப் அமைத்தார் ராய். ஒரு புறம் மாலன் பொறுமையாக விளையாடினால் கூட, மறுபுறம் ராயின் அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இங்கிலாந்து வெற்றி
அரைசதம் அடித்த ராய் 61 ரன்களில் நாசூம் அகமது பந்துவீச்சில் வெளியேறினார். முடிவில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிக்குத் தேவையான 126 ரன்களை எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணி தனது அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் அக். 30ஆம் தேதி சந்திக்கிறது. அதேபோல வங்கதேசம் தனது அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸை அக். 29ஆம் தேதி எதிர்கொள்கிறது.