பிசிசிஐ-ன் கோரிக்கை
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளதால் இந்திய அணி வீரர்கள் தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றி வருகின்றனர். இதனிடையே அவர்களுக்கு இங்கிலாந்து அணியுடன் முதல் தர பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்ய பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது.
காரணம் என்ன?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசியிருந்த கேப்டன் விராட் கோலி, நாங்கள் நியூசிலாந்து டெஸ்டுக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டிகள் வேண்டும் என கோரியிருந்தோம். ஆனால் அதற்கு ஏற்பாடு செய்து தரப்படவில்லை. அதற்கான காரணமும் இன்று வரை கூறப்படவில்லை, என பொதுவெளியில் பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்தார். இதன் காரணமாகவே பிசிசிஐ, இங்கிலாந்து வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
பயிற்சி ஆட்டம்
இந்நிலையில் பயிற்சி போட்டிகளுக்கு இங்கிலாந்து வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து அணியின் போட்டி அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல அந்நாட்டின் கவுண்டி அணிகளுடனும் இந்திய அணி 3 நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடவுள்ளது.
போட்டிகள் எங்கு?
இந்த இரண்டு போட்டிகளும் துர்ஹாம் நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி போட்டிகள் முடிந்து கொரோனா பரிசோதனைகள் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் அனைவரும் ஆகஸ்ட் 1ம் தேதி ட்ரெண்ட் ப்ரிட்ஜ் பகுதிக்கு செல்லவுள்ளனர். அதன் பிறகு ஆகஸ்ட் 4ம் தேதி போட்டி தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.