ஏமாற்றம்
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி பொறுப்பாக ஆடி அணியை சிக்கலில் இருந்து மீட்டார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர் அரை சதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 62வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்சியாக அடிக்கும் 4வது அரை சதமாகும். இந்த முறையாவது கோலி அதனை சதமாக மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 ரன்களுக்கு அடில் ரஷித் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இடைவெளி
ஒருநாள் போட்டிகளில் கோலி கடைசியாக விளையாடி 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டெஸ்ட், டி20, ஒருநாள் என 3 வடிவ போட்டிகளையும் சேர்த்து கடைசி 43 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலி கடைசியாக 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டி என்று பார்த்தால் கடைசியாக 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். இதன் பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கோலி சதமடிக்கவில்லை.
முதல் முறை
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் இதற்கு முன்னர் இவ்வளவு காலம் சதமடிக்காமல் இருந்ததே இல்லை. இதுகுறித்து பேசிய விராட் கோலி, நான் சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் எப்போதும் களத்தில் ஆடியதில்லை. அணிக்காக விளையாடி உதவ வேண்டும் என்பதற்காகவே விளையாடியுள்ளேன். அதனால் தான் குறுகிய காலத்திற்குள் என்னால் அவ்வளவு சதங்களையும், ரன்களையும் குவிக்க முடிந்தது என தெரிவித்தார்.
முக்கியமில்லை
மேலும் அவர், அணி வெற்றி பெறவில்லை என்றால் நீங்கள் சதமடித்தும் அதற்கு அர்தமற்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நாம் எவ்வளவு ரன்களை அடித்தோம் என்பதை பார்க்க போவதில்லை, எப்படி ஆடினோம் என்பதையே பார்ப்போம். இரு அணிகள் ஆடும் போது, இறுதியில் எந்த அணி வெற்றி பெற்றது என்பதே நாளின் இறுதியில் முக்கியமானதாக இருக்கும் என கோலி தெரிவித்தார்.