லார்ட்ஸ்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நான்காம் நாளான நேற்று நடைபெற்ற டாப் 5 நிகழ்வுகள்
1. விராட் கோஹ்லியின் முதுகு வலி
இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதுகு வலியால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவர் நான்காம் நாள் களத்தில் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரஹானே கவனித்துக்கொண்டார்.
2 மீண்டும் மீண்டும் சொதப்பும் ஓப்பனிங்
இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டிங் முக்கியமான இப்போட்டியில் மீண்டும் மண்ணை கவ்வியது. பொறுப்பற்ற முறையில் விளையாடிய விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டர்சன், பிராட் அபார பந்துவீச்சு
இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன் மற்றும் பிராட் சிறப்பாக பந்துவீசி தலா நான்கு விக்கெட்களை வீழ்த்தினர். மேலும் இப்போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 அதிக ரன்கள் அடித்த அஸ்வின்
இந்திய அணியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிக ரன்கள் அடித்தவர் எட்டாம் நிலையில் களமிறங்கிய அஸ்வின் மட்டுமே. அவர் இரண்டாவது இன்னிங்சில் 33* ரன்களை குவித்தார். இந்திய வீரர்கள் அடித்த ரன்களில் இதுவே அதிகபட்சமாகும்.
5 கோஹ்லி தலைமையில் முதல் இன்னிங்ஸ் தோல்வி
இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் இன்னிங்ஸ் தோல்வி இதுவேயாகும். அவர் தலைமையில் இதுவரை 37 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.