இந்திய அணி தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. கடின இலக்கு என அனைவரும் நினைத்த நிலையில் இங்கிலாந்து அணி அசால்டாக 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ (124) - பென் ஸ்டோக்ஸ் (99) ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
பந்துவீச்சு
175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து இந்திய அணிக்கு தலைவலி தந்த ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஜோடியை எந்த பவுலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய பவுலர்கள் திணறிய நேரத்தில் கூட ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு தரப்படவில்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயம் பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கும் என்றும் 2 விக்கெட்களை எடுத்திருப்பார் என்றும் பலர் கூறி வருகின்றனர். அதனால் ஏன் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது.
விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்திருந்த விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியாவின் உடல்நிலையையும் நாம் கவனிக்க வேண்டும். அவரை டி20 தொடரில் பயன்படுத்தினோம். எனவே பேட்டிங், பவுலிங் என அவரின் பணிச்சுமையும் நாங்கள் அதிகரிக்க விரும்பவில்லை. ஹர்த்திக் அணியின் முக்கியமான வீரர் ஆவார். அடுத்து வரும் இங்கிலாந்து தொடருக்கும் அவர் தேவை என்பதால் அவரின் ஃபிட்னஸ் முக்கியம் என தெரிவித்தார்.
சேவாக் காட்டம்
இதுகுறித்து பேசியுள்ள சேவாக், அடுத்து ஐபிஎல் தொடர் மட்டுமே உள்ளது. ஆனால் நீங்கள் ஹர்த்திக்கின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து தொடரை இழக்க தயாராகிவிட்டீர்கள். 4 - 5 ஓவர்கள் வீசுவது அவருக்கு பணிச்சுமை தரும் என்றால் அது தவறு. அப்படி பார்த்தால் 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வது கூட சோற்வானது தான். அதில் இருந்து 4 -5 சேர்த்து ஃபீல்டிங் செய்வது போன்றது தான் பந்துவீசுவது. அதில் பெரிய வித்தியாசம் வந்துவிட போவது கிடையாது என தெரிவித்தார்.
ஐபிஎல்
மேலும் அவர், ஹர்த்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை அதிகமாகிவிட்டது என யார் கூறியது. அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவ்வளவு அதிக போட்டிகளில் ஏதும் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலேயே ஆடுகிறார். டி20 போட்டியிலும் 2 -3 போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். எனவே ஹர்த்திக் பாண்டியா வேண்டுமானால் ஐபிஎல் தொடருக்கு முன்பு ஏதும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பந்துவீச அழைக்க வேண்டாம் என கூறியிருக்கலாம் என சேவாக் குற்றம் சாட்டியுள்ளார்.