இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர்
கொரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து கோப்பையை வென்றது.
மழையால் பாதிக்கப்பட்ட போட்டி
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினர், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோதினர். முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டியின் துவக்கம் பாதிக்கப்பட்டது. இடையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
விளாசிய பாபர் அசாம்
ஆயினும் பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர் பாபர் அசாம் தன்னுடைய அதிரடியை இந்த ஆட்டத்திலும் காண்பிக்க தவறவில்லை. அணியின் கேப்டன் அசார் அலி 6 பந்துகளை விளையாடி டக் அவுட் ஆனநிலையில் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 9 பவுண்டரிகளை விளாசி 70 பந்துகளுக்கு அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
5வது சதத்திற்காக காத்திருப்பு
கடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை விளாசிய பாபர் அசாம், இந்த போட்டியில் தொடர்ந்து அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் ஆட்டநேர முடிவில் 69 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் ஆட்டத்தில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட்டுகளை தவறவிட்ட பட்லர்
உடன் விளையாடிய ஷான் மசூத்தும் 45 ரன்களை விளாசினார். இவரது அவுட்டை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இரண்டு முறை தவறவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடந்த 2010 முதல் பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிப் பெறாமல் உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.