முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 3க்கு 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்ற நிலையில், தற்போது அந்த அணி பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. இதில் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்ற முதல் போட்டியில் வெல்லும் தீவிரத்துடன் இருந்த பாகிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது இங்கிலாந்து அணி.
2வது இன்னிங்சில் அபாரம்
காயம் காரணமாக அவதிப்பட்ட ஆல் -ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முதல் போட்டியில் குறைந்த ஓவர்களே போட்டார். ஆயினும் இரண்டாவது இன்னிங்சில் அவரது பௌலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டும் இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. இதனிடையே, ரோஸ் பௌலில் நடைபெறவுள்ள அடுத்த இரு போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் கழகம் அறிவிப்பு
இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 13ம் தேதி இரண்டாவது போட்டியும் 21ம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ், தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து விளையாடிய ஸ்டோக்ஸ்
கடந்த டிசம்பர் மாதத்தில் தன்னுடைய தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்று பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். மேலும் தொடர்ந்து 2 தொடர்களில் விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.