117 நாட்களுக்கு பிறகு போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் சௌதாம்டனில் துவங்கியது. இந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3வது போட்டியில் 399 ரன்கள் இலக்கு
இதையடுத்து சுதாரித்த இங்கிலாந்து அணி அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்றுவரும் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டியில் 2 இன்னிங்சிலும் விளையாடி 399 ரன்களை இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து அணி கொடுத்துள்ளது. இதையடுத்து சேஸிங்கில் மேற்கிந்திய தீவுகள் 5வது நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.
20 ஓவர்களில் மே.இ. தீவுகள் 79/5
நேற்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டம் மொத்தமாக மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய ஆட்டத்தை துவங்கி ஆடிவருகிறது. 20வது ஓவரின் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்துள்ளது. மழை வருவதற்கு 50 சதவகித வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
ஸ்டூவர்ட் பிராட் இணைந்தார்
13வது ஓவரின்போது மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிராத்வெயிட்டை வீழ்த்தி 500 விக்கெட்டுகள் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் எட்டியுள்ளார். இதன்மூலம் வீரர்கள் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஜேம்ஸ் ஆன்டர்சன், க்ளென் மெக்கிராத் மற்றும் கோர்ட்னே வால்ஸ் ஆகியோரின் வரிசையில் 7வது நபராக 500 விக்கெட்டுகள் கிளப்பில் அவர் இணைந்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றம்
3வது ஆட்டநேர முடிவில் 10 விக்கெட்டுகளுக்கு தனது 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து, இன்று நடைபெற்றுவரும் 5வது நாள் ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.