180 ரன்கள்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3வது டி20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று விருந்தாளியை வாஷ் அவுட் செய்திருக்கிறது இங்கிலாந்து. இதில், நேற்று (ஜூன்.26) நடந்த கடைசி டி20 போட்டி வேற ரகம். முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. டேவிட் மலன் அதிகபட்சமாக 76 ரன்களும், பேர்ஸ்டோ 51 ரங்களும் எடுத்தனர். இலங்கையில் இசுறு உடானா வீசிய 4 ஓவரில் 55 ரன்கள் விளாசப்பட, நான் என்ன சும்மாவா என்று 3 ஓவரில் 42 ரன்களை வாரி வழங்கினார் ஹஸரங்கா.
இலங்கை சாம்ராஜ்யம்
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஏற்கனவே தொடரை இழந்துவிட்டதால், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே, நிச்சயம் ஒரு காட்டு காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களும் நல்லாவே காட்டினார்கள். வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பளிச் பளிச் என்று அதகளம் புரிந்தார்கள். 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என்று இரு கோப்பைகளை வென்ற அணி அது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாக செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாக சென்றுவிட்டது.
போராட்டம் இல்லாமல் சரண்டர்
கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் கைப்பற்றிய கோப்பைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2014க்கு பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை. குறைந்தபட்சம் இந்தியா போன்று கன்சிஸ்டன்சியான ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தவில்லை. சமீபத்தில் வங்கதேசம் சென்று அந்த அணிக்கு எதிராக கூட சரண்டராகி புஸ்ஸாகிப் போன இலங்கை, இப்போது இங்கிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகியிருக்கிறது. இவர்கள் தோற்பது கூட பெரிய விஷயமல்ல. ஆனால், எந்தவித போராட்டமும் இன்று சரண்டராவது தான் பிரச்சனை.
மனம் கோணாமல்
எதிர்த்து அடிக்க ஒரு பேட்ஸ்மேன் கூடவா இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. குஷல் பெரேரா, டிக்வெல்லா, குஷல் மெண்டிஸ் போன்றோர் மட்டும் ஏதோ அவ்வப்போது சில இன்னிங்ஸ்களை வெளிப்படுத்துவதை காணலாம். மற்றபடி அணியின் எந்த இண்டென்ட்டும் இல்லை, இம்பேக்ட்டும் இல்லை. இப்போது, இலங்கை அணி, உள்நாடு, வெளிநாடு என்று எதுவாக இருந்தாலும் எதிரணிகளை நன்கு உபசரித்து, அவர்கள் மனம் கோணாமல் விளையாடி அனுப்பி வைக்கும் நிலையில் தான் இருக்கிறது.