லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது இங்கிலாந்து. உண்மையில், பாகிஸ்தான் பாவம் தான்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்த போதும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது.
அதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று இரண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்து விளையாட இருந்தது. இந்த நிலையில் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளது. முன்னதாக, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் தொடரில் இருந்து விலகியது.
பாகிஸ்தானில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கவிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த செப்.17ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டி ரத்தானது. போட்டி தொடங்குவதற்கான கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை, என்றும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் கூறுவது தவறுதான், ஆனால் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியது. மேலும் தொடரை ரத்து செய்துகொண்டு தாய் நாட்டிற்கும் கிளம்பிச் சென்றது.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாகிஸ்தான் அணி மீளாத சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள் இருந்தது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருந்தது. பாகிஸ்தானில் அக்டோபரில் இரண்டு கூடுதல் டி 20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டோம். அதனுடன் ஒரு குறுகிய பெண்கள் அணி கிரிக்கெட் தொடரையும் சேர்த்தோம். இந்நிலையில், அக்டோபர் மாதம் செய்யவிருந்த பயணம் நிறுத்தப்படுகிறது. அந்த வாக்குறுதியை திரும்பப் பெறுவதற்கான முடிவை நாங்கள் தயக்கத்துடன் எடுத்துள்ளோம்
"எங்கள் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது முன்னுரிமை. தற்போது நாம் வாழும் இந்த காலத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதில் "கவலைகள்" அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். இந்த முடிவு PCB க்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அவர்கள் தங்கள் நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் நடத்த அயராது உழைத்திருக்கிறார்கள். எங்களது இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு நாங்கள் உண்மையாக வருந்துகிறோம்" என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.